Connect with us
 

News

சிம்பு வழக்கில் தாமதம் தயாரிப்பாளர் சங்கத்திற்கு 1 லட்சம் அபராதம் !

Published

on

தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் சிம்பு நடித்து 2016ல் வெளியான படம் அன்பானவன், அடங்காதவன், அசராதவன். இந்த படத்தில் நடிக்க சிம்புக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு, 1 கோடியே 51 லட்சம் ரூபாய் முன்பணமாக வழங்கப்பட்டது. இதில் சம்பளப் பாக்கி 6 கோடியே 48 லட்சம் ரூபாயை பெற்றுத்தரக் கோரி நடிகர் சிம்பு, நடிகர் சங்கத்தில் புகார் மனு அளித்திருந்திருந்தார்.

அதேசமயம், படத்தால் தனக்கு ஏற்பட்ட இழப்பை சிம்புவிடம் வசூலித்துத் தரக் கோரி தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், இணையதளங்களில் தனக்கு எதிராக தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் அவதூறு கருத்துக்களைப் பதிவிட்டதாகக் கூறி, மைக்கேல் ராயப்பனுக்கு எதிராக 1 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு நடிகர் சிம்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில், தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், நடிகர் விஷால் ஆகியோரை எதிர் மனுதாரராகச் சேர்த்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு இன்று (மார்ச்.9) விசாரணைக்கு வந்தது. இதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, 3 வருடங்கள் கடந்தும், வழக்கில் எழுத்துப்பூர்வமான வாதத்தைத் தாக்கல் செய்யாததால், திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இந்த தொகையை மார்ச் 31ம் தேதிக்குள் பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த உத்தரவிட்டு வழக்கை, ஏப்ரல் 1ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.