News

நாடகத்தில் நடிக்க ஆசை ஒய்.ஜி.மகேந்திரனிடம் ஆசையை வெளிப்படுத்திய சிலம்பரசன் !

Published

on

சிலம்பரசன் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் விறுவிறுப்பாக வளர்ந்து வருகிறது மாநாடு திரைப்படம்.. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், அரசியல் பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, வாகை சந்திர சேகர், எஸ் ஏ சந்திர சேகர், ஒய்.ஜி,மகேந்திரன், உதயா, பிரேம்ஜி, மனோஜ் கே. பாரதி, அஞ்சனா கீர்த்தி, கருணாகரன், மகத் ராகவேந்திரா, டேனி, அரவிந்த் ஆகாஷ் என நட்சரத்தேர்விலேயே பிரமிக்க வைக்கிறார் வெங்கட் பிரபு.

குறிப்பாக இந்தப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் நடித்தால் தான், பொருத்தமாக இருக்கும் என அவரை ஒருமனதாக தேர்வு செய்துள்ளனர் இயக்குநர் வெங்கட் பிரபுவும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும்.

நடிகர் திலகம் சிவாஜி ரஜினி, கமல் என ஒரே சமயத்தில் 3 ஜாம்பவான்களுடன் நகைச்சுவையில் கலக்கிய ஒய்.ஜி.மகேந்திரன், இப்போது சிலம்பரசன் காலகட்டத்திலும் அதே உற்சாகத்துடன் வளைய வருகிறார் என்பது ஆச்சர்யம்.

“மாநாடு” படத்தில் வெங்கட்பிரபு இயக்கத்தில் பணியாற்றுவது மற்றும் மற்றும் சிலம்பரசனுடன் இணைந்து நடித்த அனுபவங்கள் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார் ஒய்.ஜி.மகேந்திரன்.

“கடந்த வருடமே “மாநாடு” படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது.. எனக்கு வெங்கட்பிரபுவின் படங்கள் பிடிக்கும்..

நானும் வெங்கட்பிரபுவும் நகைச்சுவை என்கிற ஒரே ஏரியாவில் பயணிப்பவர்கள் என்பதால் “மாநாடு” படத்தில் நடிக்க உடனே ஒப்புக்கொண்டேன்..

ஆனால் எதிர்பாராத விதமாக கடந்த வருடம் நிலவிய அசாத்திய சூழல் காரணமாக படப்பிடிப்பு சில மாதங்கள் தள்ளிப் போனாலும், இப்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

சிலம்பரசனை நான் சிறு வயதில் இருந்தே பார்த்து வருகிறேன்.. அவருடன் இதற்கு முன் “அன்பானவன் அடங்காதவன் அசராதவன்” என்கிற படத்தில் நடித்திருந்தேன்..

அதில் அவருடன் இணைந்து நடிக்கும் காட்சிகள் கொஞ்சமே இருந்தன.. ஆனால் இந்தப் படத்தில் படம் முழுதும் வருகின்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன்..

அதேபோல சிம்புவுடன் பல காட்சிகளில் நடித்தாலும், படத்தில் நான் எஸ்.ஜே.சூர்யா தரப்பு ஆளாக வருகிறேன்.. “வாலி” பட சமயத்தில் இருந்தே எஸ்.ஜே.சூர்யா பற்றி நிறைய கேள்விப்பட்டிருந்தாலும் இப்போதுதான் அவருடன் முதன்முறையாக இணைந்து நடிக்கிறேன்.எங்களது காம்பினேஷன் பெரிய அளவில் பேசப்படும்.

சிலம்பரசனைப் பொறுத்தவரை ஸ்பாட்டில் நடிக்கும்போது புதிது புதிதாக நிறைய விஷயங்களை மெருகூட்டிக் கொள்வார். என்னைப் போன்ற நாடகக் கலைஞர்கள் கையாளும் பாணி அது.. இதைவிட ஒரு விஷயம் சொன்னால் ஆச்சர்யப்படுவீர்கள்.. “இந்தப்படம் எல்லாம் முடிந்து ப்ரீ ஆனதும் உங்களுடன் சேர்ந்து ஒரு நாடகம் நடிக்கவேண்டும் சார்” எனக் கூறினார். அது நடந்தால் நன்றாக இருக்கும்” என்கிற புதிய தகவலுடன் உரையாடலை நிறைவு செய்தார் ஒய்.ஜி.மகேந்திரன்..

Trending

Exit mobile version