News
இயக்குநர் முத்தையாவுடன் இணையும் அருண் விஜய் !
நடிகர் அருண் விஜய் மற்றும் இயக்குநர் முத்தையா கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் (AV38) தலைப்பு மற்றும் முதல் தோற்றம் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து வித்தியாசமான கதைக் களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் அருண் விஜய், அடுத்ததாக இயக்குநர் முத்தையா இயக்கத்தில் தனது 38-வது படத்தில் நடிக்கிறார்.
இது குறித்து அருண் விஜய் தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”இயக்குநர் முத்தையாவுடன் இணைய இருக்கும் எனது 38-வது படத்தின் தலைப்பு மற்றும் முதல் தோற்றம் ஆகஸ்ட் 12-ம் தேதி வெளியாகும். ஒரு வலிமையான புதிய அத்தியாயம் தொடங்க இருக்கிறது” என்று உற்சாகமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த அறிவிப்புடன் அவர் பகிர்ந்துள்ள போஸ்டர் ஒன்றில் இருபுறமும் வீரர்கள் நிற்க, வாள் ஓங்கியபடி ஆக்ரோஷமாக நிற்கும் கொற்றவையின் சிற்பம் இடம்பெற்றுள்ளது. அதன் கீழ், ‘பாண்டிய குலதெவ்வரினத்தின் காவல் தெய்வம் கொற்றவையாச்சி’ என்று செதுக்கப்பட்டுள்ளது. முத்தையாவின் முந்தைய படங்களைப் போலவே இதுவும் அதிரடி ஆக்ஷன் கலந்த அழுத்தமான கிராமத்துப் பின்னணி கொண்ட கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தை நேதாஜி பிலிம்ஸ் (Nethaji Films) சார்பாக சண்முகவேல் பாண்டியன் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார். இப்படத்திற்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைக்கிறார்.
ஆகஸ்ட் 12-ம் தேதி வெளியாக உள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்காக அருண் விஜய்யின் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.