News
தனுஷுக்கு அரசியல் ஆசை இருக்கிறதா?
நடிகர் விஜய் ‘தவெக’ கட்சியைத் தொடங்கி தீவிர அரசியலில் இறங்கியுள்ள நிலையில், திரைத்துறையைச் சேர்ந்த அடுத்தடுத்த நடிகர்களும் அரசியலுக்கு வரப்போவதாக தொடர்ந்து பல செய்திகள் உலா வருகின்றன. சூர்யா அரசியலுக்கு வருவதாகக் கிளம்பிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட நிலையில், தற்போது நடிகர் தனுஷ் மீது அனைவரின் பார்வையும் திரும்பியுள்ளது.
தனுஷ் தனது ரசிகர் மன்றத்திற்காகப் புதிய கொடி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாக சமீபத்தில் தகவல்கள் பரவின. ‘எண்ணம் போல் வாழ்க்கை’ என்ற வாசகம் பொறிக்கப்பட்ட அந்த கொடியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதைத் தொடர்ந்து, தனுஷும் அரசியலில் குதிக்கத் தயாராகிவிட்டார் என்ற பேச்சுகள் அடிபடத் தொடங்கின.
இந்த அரசியல் பிரவேச வதந்திகளுக்கு தனுஷ் தரப்பிலிருந்து தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. “கடந்த 13 ஆண்டுகளாகவே தனுஷ் ரசிகர் மன்றம் இயங்கி வருகிறது; பல நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறது. சமீபத்தில் நடந்த ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூட்டத்திற்கு சிலர் அந்த கொடியைக் காரில் கட்டி வந்தனர். அது பல ஆண்டுகளாகவே பயன்பாட்டில் இருக்கும் கொடிதான். இதை வைத்துக்கொண்டு தனுஷ் அரசியலுக்கு வருவதாகச் சிலர் தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். அவருக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் எதுவும் கிடையாது” என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், தனுஷின் அரசியல் பிரவேசம் குறித்துப் பரவிய செய்திகள் வெறும் வதந்தி மட்டுமே என்பது உறுதியாகியுள்ளது.