News
துருவ நட்சத்திரம் படத்தின் நீண்ட காத்திருப்பு முடிவுக்கு வருகிறது !
நடிகர் விக்ரம் நடிப்பில், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் நீண்ட கால தாமதத்திற்குப் பிறகு திரைக்கு வரத் தயாராகி வருகிறது.
சுமார் 8 ஆண்டுகளுக்கும் மேலாக நிதிச் சிக்கல்கள் காரணமாகத் தள்ளிப்போன இப்படத்தின் வெளியீடு தொடர்பான வழக்கு, இன்று (ஏப்ரல் 30) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தை ஜூன் 15-ஆம் தேதிக்குள் வெளியிட அனுமதி அளித்துள்ளார். ஒருவேளை அந்தத் தேதிக்குள் வெளியிட முடியாவிட்டால், கால நீட்டிப்புக் கோரி மீண்டும் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, படக்குழுவினர் படத்தை விரைந்து வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். முதற்கட்டத் தகவலின்படி, மே 14-ஆம் தேதியே படத்தை வெளியிட இயக்குநர் கௌதம் மேனன் திட்டமிட்டுள்ளதாகவும், அது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆக்சன் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுத் தள்ளிப்போன நிலையில், தற்போது நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த அனுமதியால் விக்ரம் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.