News
‘ஜனநாயகன்’ தணிக்கை பிரச்சினை முடிவுக்கு வந்தது: ரிலீஸ் தேதி குறித்த அதிரடி அப்டேட் !
நீண்ட நாட்களாக தணிக்கை பிரச்சினையில் சிக்கியிருந்த விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கை குழு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ள நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள அவரது கடைசி படமான ‘ஜனநாயகன்’, தணிக்கை குழுவின் கெடுபிடிகளால் பெரும் பிரச்சினையைச் சந்தித்தது. பல மாதங்களாக இந்த பிரச்சினை முடிவுக்கு வராத நிலையில், படக்குழு நீதிமன்றத்தை நாடியது. அங்கும் உடனடியாக எந்தவொரு முடிவும் எட்டப்படாததால் படக்குழு அமைதியாகக் காத்திருந்தது.
தற்போது ‘ஜனநாயகன்’ படத்தை இறுதியாகப் பார்த்த தணிக்கை குழுவினர், படத்திற்கு ‘ஏ’ (A) சான்றிதழ் வழங்கியுள்ளனர். மேலும், படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளை நீக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.
தற்போது நீக்கப்பட்ட காட்சிகளுக்கான முறையான உத்தரவாதத்தைப் படக்குழுவினர் தணிக்கை குழுவிடம் அளிக்க வேண்டும். அந்தப் பணிகள் முடிவு பெற்றவுடன் அதிகாரப்பூர்வ தணிக்கை சான்றிதழ் வழங்கப்படும். இந்த நடைமுறைகள் அனைத்தும் இன்னும் ஓரிரு நாட்களில் முழுமையாக முடிந்துவிடும் எனத் தெரிகிறது.
தமிழ் தணிக்கை சான்றிதழ் கிடைத்தவுடன், அதை அடிப்படையாகக் கொண்டு மற்ற மொழிகளுக்கான தணிக்கைக்கு விண்ணப்பிக்கப் படக்குழு முடிவு செய்துள்ளது. இந்தப் பணிகள் அனைத்தும் ஒரு வாரத்திற்குள் நிறைவடையும். தணிக்கை பணிகள் முழுமையாக நிறைவடைந்த பிறகு, ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் புதிய ட்ரெய்லர் ஒன்றை வெளியிட்டு, படத்தின் விளம்பரப் பணிகளைத் தீவிரப்படுத்தத் திட்டமிட்டுள்ளனர்.
தணிக்கை தடைகள் அனைத்தும் விலகியுள்ளதால், ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஜூலை 23 அல்லது ஜூலை 30 ஆகிய தேதிகளில் ஏதேனும் ஒன்றில் திரையரங்குகளில் வெளியாகும் என்று விநியோகஸ்தர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.