News
பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கே. ராஜன் ஆற்றில் குதித்து தற்கொலை !
தமிழ் திரையுலகின் மூத்த தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான கே. ராஜன் (85) இன்று மாலை சென்னை அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
1983 ஆம் ஆண்டு வெளியான ‘பிரம்மச்சாரிகள்’ என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகத் தனது திரைவாழ்க்கையைத் தொடங்கினார் கே. ராஜன். தொடர்ந்து 1991 இல் நிழல்கள் ரவி மற்றும் சரத்குமார் நடிப்பில் வெளியான ‘நம்ம ஊரு மாரியம்மா’ திரைப்படத்தை இயக்கினார். மேலும், இயக்குனர் செந்தில்நாதன் இயக்கத்தில் வெளியான ‘தங்கமான தங்கச்சி’ படத்திற்கு கதை-வசன எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார்.
சென்னை விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவராகப் பொறுப்பு வகித்த இவர், சமீப காலங்களாக சினிமா விழாக்கள் மற்றும் பொது மேடைகளில் தமிழ் சினிமா குறித்து மிகவும் துணிச்சலாகப் பேசி வந்தார். குறிப்பாக, சிறிய பட்ஜெட் படங்களின் நல்வாழ்விற்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த கே. ராஜன், முன்னணி நடிகர்களின் நன்மதிப்பைப் பெற அஞ்சாமல் அவர்களின் அதிக்கப்படியான சம்பளம் குறித்தும் பகிரங்கமாக விமர்சித்து வந்தார்.
இந்த நிலையில், இன்று (மே 17) மாலை சென்னை அடையாறு ஆற்றில் குதித்து அவர் தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், அவரது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
85 வயதான மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன் அவர்களின் தற்கொலைக்கான துல்லியமான காரணம் இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.