News
சூர்யாவின் மெகா கம்பேக்: பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும் ‘கருப்பு’ !
ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழை பொழிந்து வருகிறது. பல வருடங்களாகவே ஒரு பிரம்மாண்ட சூப்பர்ஹிட் வெற்றிக்காக காத்திருந்த சூர்யாவுக்கு, இப்படம் ஒரு மாபெரும் கம்பேக் ஆக அமைந்துள்ளது. சூர்யா ரசிகர்களை மட்டுமின்றி, அனைத்து தரப்பு பொதுவான ரசிகர்களையும் இப்படம் வெகுவாகக் கவர்ந்துள்ளது.
ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பால், படம் வெளியான முதல் நாளில் இருந்தே ‘கருப்பு’ திரைப்படம் சிறப்பான வசூலைப் பெற்று வருகிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வெளிநாடுகளிலும் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
ரூ.200 கோடியை கடந்த ‘கருப்பு’
வசூலில் புதிய மைல்கற்களை எட்டி வரும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் ‘கருப்பு’ திரைப்படம் தற்போது ரூ.100 கோடி வசூலைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. அதேசமயம், உலக அளவில் இப்படம் ரூ.207 கோடியை தாண்டியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் நேற்றே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தற்போதைய வசூல் நிலவரப்படி, இந்த வார இறுதிக்குள் ‘கருப்பு’ திரைப்படம் ரூ.225 கோடி வசூலை சுலபமாகத் தாண்டிவிடும் என திரை வர்த்தகர்கள் கணிக்கின்றனர். இதுவரை சூர்யா நடித்த திரைப்படங்களிலேயே ‘கருப்பு’ திரைப்படம் தான் அதிக வசூலை ஈட்டிய படமாக உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர் தோல்விகளைத் தகர்த்து, ‘கருப்பு’ படத்தின் மூலம் சூர்யா தனது பாக்ஸ் ஆபிஸ் ஆதிக்கத்தை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளார்.