News
மீண்டும் தள்ளிப்போன யஷ்ஷின் டாக்சிக் ரிலீஸ் !
யஷ், நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘டாக்சிக்’ படத்தின் வெளியீடு மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஓடிடி (OTT) உரிமை எதிர்பார்த்த விலைக்குப் போகாததே இதற்குக் காரணம் எனத் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கீது மோகன்தாஸ் இயக்கத்தில், ‘கே.ஜி.எஃப்’ புகழ் நடிகர் யஷ் நடிக்கும் புதிய பான் இந்தியா திரைப்படம் ‘டாக்சிக்’. இத்திரைப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
முதலில் இந்தப் படம் மார்ச் 19-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின்பு சில காரணங்களால் ஜூன் 4-ஆம் தேதிக்கு ரிலீஸ் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார்கள். எனினும், கடந்த சில வாரங்களாகவே இப்படம் மீண்டும் தள்ளிப்போகலாம் என செய்திகள் உலா வந்தன.
தற்போது அந்தச் செய்திகளை உறுதிப்படுத்தும் வகையில், ‘டாக்சிக்’ படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால், இம்முறை படத்தின் புதிய வெளியீட்டுத் தேதியை படக்குழுவினர் எதையும் குறிப்பிடாமல் சஸ்பென்ஸாக வைத்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
படத்தின் வெளியீடு தொடர்ந்து தள்ளிப்போவதற்கான காரணம் குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘டாக்சிக்’ திரைப்படத்தின் ஓடிடி (OTT) வெளியீட்டு உரிமைக்கு படக்குழு எதிர்பார்த்த விலை இன்னும் கிடைக்கவில்லையாம். வியாபார ரீதியான இந்தப் பேச்சுவார்த்தைகள் முழுமையடையாத காரணத்தினாலேயே படத்தின் வெளியீட்டை மீண்டும் தள்ளி வைத்துள்ளதாகத் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதிய ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.