News
முதல்வர் பதவியில் விஜய் நிலைத்து நிற்பார் – வரலட்சுமி நெகிழ்ச்சிப் பதிவு !
சமீபத்தில் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள சி. ஜோசப் விஜய்யை, நடிகை வரலட்சுமி தனது கணவருடன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். சந்திப்பிற்குப் பின், முதல்வர் விஜய் குறித்தும் அவரது அரசியல் பயணம் குறித்தும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
விஜய்யுடன் ‘சர்கார்’ திரைப்படத்தில் பிரதான வில்லி கதாபாத்திரத்தில் நடித்தவர் வரலட்சுமி. இந்த நிலையில், சென்னை இல்லத்தில் நடந்த இந்தச் சந்திப்பு குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“தளபதி..!! இந்தப் பதிவைப் பற்றி என்ன சொல்வது என்று யோசித்தேன். ஆனால் ஏற்கனவே பல விஷயங்கள் பேசப்பட்டுவிட்டதால் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சொல்ல விரும்புகிறேன். மக்கள் நூறு விதமான விஷயங்களைப் பேசலாம்; ஆனால் நாளின் முடிவில் சி. ஜோசப் விஜய் தான் நம்முடைய முதல்வர், அவர் இங்கு நிலைத்து நிற்கவே வந்திருக்கிறார்..!!
விமர்சிப்பது மிகவும் எளிது. ஆனால், முதல் முயற்சியிலேயே முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அபாரமான தைரியம், மன உறுதி மற்றும் தமிழக மக்களின் அளப்பரிய அன்பு தேவை. இந்த அதிகாரமிக்க பதவியை நாம் அனைவரும் மதிப்போம். வார்த்தைகளை விட செயல்களே எப்போதும் பேசும்.
தொடர்ந்து குற்றம் கண்டுபிடிப்பவர்களுக்கு, காலம் உண்மையை வெளிப்படுத்தும். அதுவரை, அவர் என்ன சாதிக்கிறார் என்பதைப் பார்க்க கொஞ்சம் பொறுமை, மரியாதை மற்றும் ஊக்கத்தை அளிப்போம்.
ஐ லவ் யூ சார்.. எப்போதும், என்றென்றைக்குமே நான் ஒரு ‘விஜய் வெறியன்’. எங்களைச் சந்தித்து, எங்களுடன் இவ்வளவு நேரம் செலவிட்டதற்கு நன்றி. ‘சர்க்கார்’ படப்பிடிப்பு தளத்தில் நான் அவரிடம் சொன்னதை நினைத்து இப்போது சிரித்தோம்; அவருடைய பயணம் இதுதான் என்று எனக்கு அப்போதே தெரியும். அவர் எப்போதும் அன்பானவர் மற்றும் எளிமையானவர்.
இந்தச் சந்திப்பின்போது பெண்கள் நலன் சார்ந்த சில பிரச்சனைகள் குறித்தும் நாங்கள் விவாதித்தோம். தமிழ்நாட்டு மக்களுக்கு நடக்கவிருக்கும் அற்புதமான மாற்றங்களைக் காண நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்..!! கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும் சார், உங்கள் தலைமையில் தமிழக மக்கள் செழிக்கட்டும்..!!”
இவ்வாறு நடிகை வரலட்சுமி தனது பதிவில் தெரிவித்துள்ளார். ‘சர்கார்’ திரைப்படத்தில் முதல்வரை எதிர்த்து அரசியல் செய்யும் வில்லியாக நடித்த வரலட்சுமி, நிஜத்தில் முதல்வராகியிருக்கும் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்தியிருப்பது இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.