News
காமெடி படங்களில் நடிப்பது கடினம் – சம்யுக்தா விஸ்வநாதன் !
பேஷன் ஸ்டுடியோஸ், ஜி ஸ்கொயர் மற்றும் தி ரூட் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில், இயக்குநர் நிரஞ்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘மிஸ்டர் பாரத்’. நடிகர் பாரத் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சம்யுக்தா விஸ்வநாதன் நடித்துள்ளார். மேலும், பாலா சரவணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
இப்படம் குறித்தும் தனது திரைப்பயணம் குறித்தும் நடிகை சம்யுக்தா விஸ்வநாதன் சமீபத்தில் மனம் திறந்து பேசினார். அவர் கூறியதாவது:
“‘கீசுகீசு…’ பாடலைத் தொடர்ந்து எனக்கு கிடைத்த வாய்ப்பில், நான் நடித்த முதல் திரைப்படம் இதுதான். ஆனால், இப்படம் இப்போதுதான் திரைக்கு வருகிறது. சினிமாவில் தொடர்ந்து ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிப்பதை நான் விரும்பவில்லை; வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து கலக்கவே ஆசைப்படுகிறேன்.
அதே சமயம், காமெடி கதைகளில் நடிக்க எனக்கு சற்று பயம் இருக்கிறது. காமெடியில் லேசாக டைமிங் தவறினாலும், அது தொய்வை ஏற்படுத்திவிடும். எனவே, திரையில் பார்க்க எளிதாகத் தோன்றினாலும், காமெடி படங்களில் நடிப்பது மிகவும் கடினமான ஒன்றுதான்.
இதுவரை நான் சினிமாவில் எடுத்த முடிவுகள் அனைத்தையும் நன்றாக யோசித்தும், எனது பெற்றோரிடம் ஆலோசனை செய்துமே எடுத்துள்ளேன். என்னைப் பொறுத்தவரை ரசிகர்கள் என் நடிப்பைப் பார்த்து ரசிக்க வேண்டும், என் மீது அன்பு செலுத்த வேண்டும்.
விமர்சனங்களுக்கு ஆளாகும் வகையிலான எந்தவொரு போக்கிலும் நான் ஈடுபட மாட்டேன். எனக்கு நிறைய சவால்கள் உள்ளன. ‘போகிற போக்கில் அனைத்தையும் பார்த்துக்கொள்ளலாம்’ என்ற நம்பிக்கையோடு எனது திரைப்பயணத்தைத் தொடர்ந்து வருகிறேன்” என்று அவர் தெரிவித்தார்.