News

என்னுடைய ஆக்ஸிஜனே தமிழ் ரசிகர்கள்தான் – நடிகை சுவாசிகா !

Published

on

மலையாள திரையுலகில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் முத்திரை பதித்து வரும் நடிகை சுவாசிகா, தனது சமீபத்திய படமான ‘நூறு சாமி’ படத்திற்கு கிடைத்துள்ள பிரம்மாண்ட வரவேற்பை கண்டு ஆனந்தக் கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

‘லப்பர் பந்து’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் பேராதரவைப் பெற்றவர் நடிகை சுவாசிகா. தற்போது, இயக்குநர் சசி இயக்கத்தில் இவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘நூறு சாமி’ திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.

முழுக்க முழுக்க ஒரு பெண்ணின் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. திருமணமான ஒரு பெண், தனது வாழ்வில் இரண்டாம் திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கும் போது, அவர் சமூகத்தில் என்னென்ன சவால்களையும் பிரச்சனைகளையும் சந்திக்கிறார் என்பதை இப்படம் ஆழமாகப் பேசுகிறது.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், விமர்சகர்களிடம் பாராட்டுகளையும் பெற்று வரும் இப்படத்தைப் பார்க்கும் பல பெண்கள், படத்தோடு ஒன்றிப்போய் திரையரங்குகளிலேயே கண்ணீர் விட்டு நெகிழ்ந்து வருகின்றனர்.

தன் படத்திற்கு கிடைத்துள்ள இந்த மாபெரும் வரவேற்பைக் கண்டு நெகிழ்ந்துள்ள நடிகை சுவாசிகா, தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் உணர்ச்சிப்பொங்கப் பேசியிருப்பதாவது:

தமிழ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய நன்றி. இதைத் தவிர வேறு என்ன சொல்வது, எனது நன்றியை வார்த்தைகளால் எப்படி விவரிப்பது என்று எனக்குத் தெரியவில்லை. என் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பைப் பார்த்து நெகிழ்ச்சி அடைகிறேன். “கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு கதையில் நான் நடித்து, அந்தப் படம் இத்தனை திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடம் இந்த அளவுக்கு வரவேற்பைப் பெறும் என்று நான் ஒருநாளும் கற்பனை செய்து கூட பார்த்ததில்லை. ஆனால் இன்று அது நடந்துள்ளது. தமிழ் ரசிகர்கள் கொடுக்கும் இந்த மாபெரும் ஆதரவுக்கு நான் எப்போதும் நன்றி கடன்பட்டிருக்கிறேன். இப்போது என்னுடைய ஆக்சிஜனே தமிழ் ரசிகர்கள்தான்.

மேலும் அந்த வீடியோவின் முடிவில், “இனி வரும் காலங்களில் இன்னும் பொறுப்புடன் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து, உங்களை ஏமாற்றாதபடி கடினமாக உழைப்பேன்” என்று ஆனந்தக் கண்ணீரோடு சுவாசிகா உறுதியளித்துள்ளார்.

கதையின் நாயகியாக சுவாசிகா எடுத்துள்ள இந்த புதிய அவதாரம், தமிழ் சினிமாவில் அவருக்கு ஒரு நிலையான இடத்தை பிடித்துக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version