Connect with us
 

News

என் படத்தை கவலையை மறந்து ரசிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய நோக்கம் – சுந்தர்.சி !

Published

on

குடும்பங்கள் சிரித்து கொண்டாடும் ஜனரஞ்சகமான படங்களை இயக்குவதில் சிறந்தவர் சுந்தர் சி. இவர் இயக்கிய அரண்மனை மற்றும் அரண்மனை2 போன்ற பேய் படங்கள் நகைச்சுவையோடு குடும்பங்களும் ,குழந்தைகளும் கொண்டாடும் வகையில் வெளியாகி ஹிட் அடித்த படங்கள் . அரண்மனை முதல் இரண்டாம் பாகங்களின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தற்போது சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா, ராஷிக்கண்ணா நடிப்பில் அரண்மனை 3 திரைப்படம் உருவாக்கப்பட்டு ரிலீஸுக்கு தயாராகி உள்ளது. அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரிக்க C.சத்யா இசையமைக்கிறார் .

ஆர்யா, ராஷிக்கண்ணா, சுந்தர்.சி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க,விவேக், யோகி பாபு, ஆண்ட்ரியா ,மனோபாலா,சம்பத், சாக்‌ஷி அகர்வால், மதுசூதன ராவ், வின்சென்ட் அசோகன், வேல ராமமூர்த்தி, நளினி, விச்சு விஸ்வநாத் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது அதில் இயக்குனர் சுந்தர் சி அவர்கள் பேசியவை :-

நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . அரண்மனை பாகங்கள் இரண்டும் நீங்கள் மற்றும் ரசிகர்கள் ஆதரவுடன் மிகப் பெரிய வெற்றி அடைந்தது. எல்லோரும் சொல்வார்கள் அரண்மனை படத்தை ஈசியாக எடுத்து விட்டீர்கள் என்று ஆனால் அது மிகவும் கஷ்டம். இந்த மாதிரியான படங்களை மக்கள் விரும்புமாறு கொடுப்பது கொஞ்சம் கஷ்டம்தான் .ஏற்கனவே உள்ள விஷயங்களை விட கொஞ்சம் வேறுபட்டதாக இருக்க வேண்டும். அரண்மனை படத்தின் இரண்டு பாகங்களுமே நல்ல வசூலையும் வெற்றியும் தந்தது. ஆனால் உடனடியாக அதன் அடுத்த பாகத்தை எடுக்க முடியாது .அதற்கான கதையும் .நடிகர்கள் ,தொழில்நுட்ப குழுக்களும் அமைந்தால் மட்டுமே சாத்தியம்.

மற்ற நடிகர்களை போல் இல்லாமல் நடித்து கொடுத்து செல்லாமல் பிசினஸ் ரீதியாக எனக்கு உதவியாக இருந்தார் ஆர்யா. அரண்மனை படம் என்றாலே நடிகைகளுக்கு முக்கியத்துவம் இருக்கும். இந்த படத்திலும் ஆண்ட்ரியா ராஷி கண்ணா ,சாக்ஷி அகர்வால் எல்லாருக்குமே முக்கிய கதாபாத்திரம் தான்.

அரண்மனை பாகம் 1 உதயநிதி அவர்கள் வெளியிட்டார் .தற்போது அரண்மனை 3 திரைப்படத்தை பிரம்மாண்டமான முறையில் வெளியிடுகிறார். இந்த படத்தை பார்த்த ஒரே நபர் உதயநிதி அவர்கள் மட்டும்தான்.அரண்மனை 1 படத்தை பார்த்து கண்டிப்பாக வெற்றி பெறும் என்று சொன்னவரும் அவர்தான் .தற்போது அரண்மனை 3 படத்தை பார்த்துவிட்டு அருமைக இருக்கிறது என்று சொன்னவரும் அவர்தான். என்னுடைய படங்கள் எல்லாமே கமர்சியல் படம்தான் .படத்தை பார்க்கின்ற சிறுவர்கள் பொதுமக்கள் தாய்மார்கள் அனைவருமே கவலையை மறந்து ரசிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய நோக்கம். அரண்மனை இரண்டு பாகங்களை விட அரண்மனை 3 பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது.