Connect with us
 

Reviews

இதயம் முரளி – திரைவிமர்சனம் !

Published

on

Cast: Atharvaa, Preity, Kayadu, Natty, Thaman S, Niharika, Rakshan, Dravid, Angeline, Anju Kurian, Sudhakar, Yashashree, Jonita
Production: Dawn Pictures 
Director: Aakash Baskaran
Screenplay: Aakash Baskaran, Dravid Selvam Lyrics – Vivek
Cinematography: Manoj Paramahamsa, CH Sai
Editing: Pradeep E Ragav
Music: Thaman S
Language: Tamil
Runtime: 2H 46Min
Release Date: 10 July 2026

கதைக்களம்:

90-களின் தமிழ் சினிமாவில் ‘ஒருதலைக் காதல்’ என்றாலே நம் நினைவுக்கு வருபவர் நடிகர் முரளி. காதலிடம் தன் காதலைச் சொல்ல முடியாமல் தவிக்கும் காதலர்களின் கண்ணாடியாக விளங்கிய அவரது நினைவை மீட்டும் வகையில், அவரது மகன் அதர்வா நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் இந்த ‘இதயம் முரளி’.

இன்றைய ஜெனரேஷன் (Gen Z) அறியாத பல 90ஸ் வாழ்வியல் நினைவுகளோடு, முத்தம் கொடுத்தால் குழந்தை பிறக்கும், தர்பூசணி விதையை விழுங்கினால் வயிற்றில் மரம் முளைக்கும் என்ற அலாதியான நம்பிக்கைகள் கொண்ட ‘இதயா’ என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார் அதர்வா. பள்ளிக்கால ஆசிரியர் மீதான முதல் காதல், பள்ளிப் பருவக் காதல், கல்லூரி காலக் காதல் என நீளும் அவரது காதல் எக்ஸ்பிரஸில், இதயா தன் காதலை காதலியிடம் சொன்னாரா இல்லையா? யாரைக் கரம் பிடித்தார்? என்பதே படத்தின் மையக்கதை.

நடிப்பு மற்றும் கதாபாத்திரங்கள்:

படம் முழுக்க காதலைச் சொல்லத் தவிக்கும் கதாபாத்திரத்தை அதர்வா கச்சிதமாகத் தாங்கியிருக்கிறார். சொல்லப்போனால், படம் முழுவதும் நடிப்பதற்கான வாய்ப்பு அதர்வாவிற்கு மட்டுமே அதிகமாகக் கிடைத்துள்ளது. ஆனால், பால்ய வயதுக் காதலை இளைஞனான பிறகும் சுமந்து திரியும் காட்சிகள் அவரை ஒரு காதலனாகக் காட்டுவதை விட குழப்பவாதியாகவே சித்தரிக்கிறது. முதலில் ஜோனிடா, பிறகு பிரீத்தி முகுந்தன், தொடர்ந்து கயடு லோகர் என அடுத்தடுத்து காதலிக்கும் கதையில் ஆழம் இல்லாதது பலவீனம்.

அதர்வாவின் நண்பர்களாக வரும் ரக்சன், டிராவிட், சுதாகர் மற்றும் தமன் ஆகியோரின் நடிப்பு பல இடங்களில் செயற்கையாக இருப்பதால் படத்தோடு ஒன்ற முடியவில்லை. முதல் பாதியில் கலகலப்பு ஊட்டும் சுதாகர் திடீரென காணாமல் போகிறார். பகத் பாஸில், மாளவிகா மோகன், அஞ்சு குரியன் எனப் பல எதிர்பாராத முகங்கள் படத்தில் இருந்தாலும், அவர்கள் யாருடைய கதாபாத்திரமும் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை.

இயக்கம் மற்றும் திரைக்கதை:

இயக்குனர் ஆகாஷ் பாஸ்கரன் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துவதில் காட்டிய சுவாரசியத்தை கதைக்குள் செல்வதில் காட்டத் தவறிவிட்டார். முதல் பாதி முடியும் வரை கதை எதை நோக்கிச் செல்கிறது என்றே தெரியவில்லை. முதல் பாதியில் காதலைச் சொல்ல முடியாமல் தவிக்கும் அதே அதர்வா, இரண்டாம் பாதியிலும் அப்படியே தொடர்வது திரைக்கதையின் சுணக்கத்தைக் காட்டுகிறது.

இருப்பினும், கிளைமாக்ஸை நோக்கி நகரும் ரயில் நிலையக் காட்சியில் அதர்வாவிற்கும் கயடு லோகருக்கும் இடையே நடக்கும் உரையாடல்கள் மற்றும் உணர்வுகள் மட்டுமே பார்வையாளர்களைக் சற்றே கவர்கிறது. கிளைமாக்ஸ் போன்ற சீரியஸான நேரங்களில் தேவையில்லாமல் வைக்கப்பட்டுள்ள நகைச்சுவைக் காட்சிகள் படத்தின் ஓட்டத்தைத் துண்டிக்கின்றன.

தொழில்நுட்பக் கலைஞர்கள்:

தமனின் இசையில் ‘கட்டழகி’ பாடல் மட்டுமே மனதில் நிற்கிறது; பின்னணி இசை ஆங்காங்கே படத்திற்கு முட்டுக் கொடுக்கிறது. மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு படத்திற்குத் தேவையான தரத்தைத் தந்துள்ளது. படத்தொகுப்பில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி, நீளத்தைக் குறைத்திருக்கலாம்.

நிறைகள்:

  • 90ஸ் நினைவூட்டல்கள் மற்றும் சில நகைச்சுவைக் காட்சிகள்.

  • அதர்வா – கயடு லோகர் இடையேயான ரயில் நிலையக் காட்சி.

குறைகள்:

  • ஆழமில்லாத மற்றும் திசையின்றி நகரும் பலவீனமான திரைக்கதை.

  • தேவையின்றித் திணிக்கப்பட்ட ஏராளமான கதாபாத்திரங்கள் (பகத் பாஸில், மாளவிகா மோகன் உட்பட).

  • சீரியஸான காட்சிகளில் ஒட்டாத காமெடி டிராக்.

முடிவுரை:

ஒருதலைக் காதலின் அடையாளமாகத் திகழ்ந்த ‘இதயம்’ முரளியின் பெயரைத் தாங்கி வந்த இந்தத் திரைப்படம், ஆழமில்லாத எழுத்தால் பார்வையாளர்களை முழுமையாகக் கவரத் தவறிவிட்டது.