News
சிகிச்சை பலனின்றி பிரபல நகைச்சுவை நடிகர் முத்துக்காளையின் மனைவி பரிதாபமாக உயிரிழப்பு !
தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் முத்துக்காளையின் மனைவி மாலதி (47), மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
‘செத்து செத்து விளையாடுவோமா’ உள்ளிட்ட பல பிரபலமான நகைச்சுவை வசனங்கள் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் முத்துக்காளை. வடிவேலு, விவேக் ஆகியோருடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்றவர். இவரது மனைவி மாலதி (வயது 47).
சமீபத்தில் மாலதிக்கு திடீரென மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால், அவர் உடனடியாக சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏற்பட்ட கடுமையான நோய்த்தொற்று (Infection) காரணமாக அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால் கடந்த 17 நாட்களாக அவர் சுயநினைவின்றி தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடி வந்தார்.
தனது மனைவியின் மருத்துவச் செலவிற்காகப் போராடி வந்த முத்துக்காளை, “கடந்த 17 நாட்களாக தனி ஆளாகப் போராடி வருகிறேன்; என் மனைவியின் உயிரைக் காப்பாற்ற தேவையான மேம்பட்ட சிகிச்சைக்கு தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் உதவி செய்ய வேண்டும்” என்று சமீபத்தில் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டு உருக்கமான கோரிக்கை விடுத்திருந்தார். இது இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்தது.
மேம்பட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையிலும், மாலதியின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில், மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், துரதிர்ஷ்டவசமாக சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
தன் மனைவியைக் காப்பாற்றப் போராடிய நடிகர் முத்துக்காளை, இறுதியில் அவரைப் பறிகொடுத்துள்ள சம்பவம் அவரது ரசிகர்களையும், சக திரையுலகப் பிரபலங்களையும் கடும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. நடிகர் முத்துக்காளை மற்றும் அவரது குடும்பத்தினருக்குப் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
