News
ஜன நாயகன் படத்தில் காட்சிகள் நீக்கம் கண்ணீர் விட்டு அழுத நடிகை ஆனந்தி !
எச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் நேற்று (ஜூலை 23) திரையரங்குகளில் வெளியான ‘ஜன நாயகன்’ திரைப்படத்திலிருந்து தனது காட்சிகள் நீக்கப்பட்டதால், நடிகை ஆனந்தி கண்ணீர் விட்டு அழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கே.வி.என் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, நிழல்கள் ரவி, ரேவதி எனப் பல நட்சத்திரங்கள் நடித்த ‘ஜன நாயகன்’ திரைப்படம் ரசிகர்களின் பெரிய வரவேற்போடு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த திரைப்படம் தணிக்கைச் சான்றிதழ் பிரச்சினைகளால் தாமதமாக வெளியாகியது. மேலும், இணையத்திலும் கசிந்த நிலையில் உள்ளது. மேலும், முதல் நாளில் தமிழகத்தின் பல திரையரங்குகளில் காட்சிகள் ஹவுஸ் ஃபுல் ஆகியுள்ளன.
இந்நிலையில், இந்தப் படத்தில் நடித்திருந்த நடிகை ஆனந்தி, தனது காட்சிகள் முழுவதும் எடிட்டிங்கில் நீக்கப்பட்டதால் மிகுந்த மனவேதனையுடன் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, “நான் நிறைய படங்களில் நடிக்கிறேன், சில நேரங்களில் எனது காட்சிகள் எடிட்டிங்கில் நீக்கப்படும். அதற்காக நான் பெரிதாக வருத்தப்பட்டதில்லை. ஆனால், ‘ஜன நாயகன்’ படத்தில் எனது காட்சிகள் நீக்கப்பட்டது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. சிறிய இடைவெளிக்குப் பிறகு நான் முதலில் ஒப்பந்தமான படம் இதுதான்.
இதன் வெளியீட்டிற்காக ஓராண்டாக காத்திருந்தேன். நடிகர் விஜய் சாருடன் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. அவர் தொடர்ந்து நடித்தால் அவருடன் மீண்டும் நடிக்க வாய்ப்பு கிடைக்கும். எனினும், இதுதான் அவரது கடைசி திரைப்படம் என்பதால் இந்த வாய்ப்பு எனக்கு மிக முக்கியமானது.
பெண்கள் முன்னேற்றத்திற்காக எடுக்கப்பட்ட இந்த படம் மிகச் சிறப்பாக வந்துள்ளது. திரையரங்கிற்கு மிகவும் ஆவலுடன் சென்று எனது காட்சிகளை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். ஆனால், அவை எடிட்டிங்கில் நீக்கப்படும் என்று நான் சற்றும் நினைக்கவில்லை. எனினும், என்னை மிகவும் அதிர்ஷ்டமில்லாதவளாக உணர்கிறேன்” என்று கண்ணீர் மல்கக் கூறியுள்ளார்.
இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி கமெண்ட் செய்து வருகின்றனர். முன்னதாக, ‘கருப்பு’ என்ற திரைப்படத்திலும் நடிகை ஆனந்தியின் காட்சிகள் எடிட்டிங்கில் நீக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
