Connect with us
 

News

நீண்ட போராட்டத்திற்குப் பின் வெளியாகும் முதல்வரின் ‘ஜனநாயகன்’ ஜூலை 23-ல் திரைக்கு வருகிறது !

Published

on

தணிக்கை குழுவின் இழுபறி, இணையதள கசிவு என பல தடைகளைத் தாண்டி, முதலமைச்சர் விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ படம் வரும் ஜூலை 23-ஆம் தேதி உலகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

6 மாத காத்திருப்புக்கு எண்டு கார்டு: எச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜனநாயகன்’. விஜய்யின் கடைசி திரைப்படமான இது, கடந்த ஜனவரி 9-ஆம் தேதியே வெளியாக வேண்டியது. ஆனால், தணிக்கை சான்றிதழ் (சென்சார்) வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் அடுத்தடுத்த நீதிமன்ற வழக்குகளால் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையே, தேர்தலுக்கு முன்பாகவே முழுப் படமும் இணையத்தில் கசிந்து படக்குழுவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சில கைது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.

தணிக்கை குழுவின் ‘ஏ’ சான்றிதழ்: தேர்தலில் வெற்றி பெற்று விஜய் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற நிலையில், படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில், கடந்த ஜூலை 9-ஆம் தேதி தணிக்கை வாரியம் ‘ஜனநாயகன்’ படத்திற்கு ‘ஏ’ (A) சான்றிதழ் வழங்கியுள்ளது. படத்தின் மொத்த நீளம் 183 நிமிடங்கள் (3 மணி நேரம் 3 நிமிடங்கள்) எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உற்சாகத்தில் ரசிகர்கள்: ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஜூலை 23-ஆம் தேதி வெளியாகும் என்றும், இதற்கான டிக்கெட் முன்பதிவு ஜூலை 19-ஆம் தேதி துவங்கும் எனவும் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. “நெருப்பால் சோதிக்கப்பட்டது, காலத்தால் செதுக்கப்பட்டது, வரலாற்றிற்காக உருவாக்கப்பட்டது. போர் எவ்வளவு கடுமையாக இருக்கிறதோ, வெற்றியின் முழக்கம் அவ்வளவு சிறந்ததாக இருக்கும்” என்ற அதிரடியான வாசகத்துடன் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

படம் அறிவிக்கப்பட்டு 6 மாதங்களுக்குப் பிறகு வெளியாவதாலும், திரையில் ‘தளபதி விஜய்’ என்பதற்குப் பதிலாக “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்” என டைட்டில் கார்டு இடம்பெற உள்ளதாலும் விஜய் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் படத்தை திரையரங்குகளில் கொண்டாடத் தயாராகி வருகின்றனர்!