News
எனக்கு விஜய் மீது பொறாமை இல்லை அதே சமயம் 2001-ம் வருடம் நான் அரசியலுக்கு வந்திருந்தால் 100 சதவீதம் வெற்றி பெற்றிப்பேன் – ரஜினிகாந்த் !
தமிழக அரசியலில் திமுக – அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க நடிகர் ரஜினிகாந்த் முயன்றதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி பெரும் பரபரப்பை கிளப்பியது. நடிகர் விஜய் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றதைத் தடுக்கவே ரஜினிகாந்த் இத்தகைய முயற்சியில் ஈடுபட்டார் என்று விமர்சனங்கள் எழுந்த நிலையில், இது குறித்து ரஜினிகாந்த் தற்போது செய்தியாளர்களைச் சந்தித்து விரிவான விளக்கம் அளித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் ரஜினிகாந்த் கூறியதாவது:
“நடந்து முடிந்த தேர்தலில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் தோல்வி எனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது. அவர் எனக்கு 38 ஆண்டுகளுக்கும் மேலான மிக நெருங்கிய நண்பர். எங்கள் இருவருக்குள் இருக்கும் நட்பு என்பது அரசியல் கொள்கைகளுக்கு அப்பாற்பட்டது. அந்த நட்பின் அடிப்படையிலேயே நான் அவரை நேரில் சந்தித்து எனது ஆறுதலைக் கூறினேன்.
ஆனால், விஜய் முதல்வர் ஆவதைத் தடுப்பதற்காக, தமிழகத்தின் இரு பெரும் பெரிய கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவை ஒன்றிணைத்து கூட்டணி அமைக்க நான் முயன்றதாகச் சிலர் விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர். அப்படித் தரம் கெட்டுப் பேசும் நபர் இந்த ரஜினிகாந்த் இல்லை.”
“விஜய் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராகப் பொறுப்பேற்றதும் சமூக வலைதளம் (Social Media) மூலமாக நான் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தேன். சமீபத்தில் நான் விமான நிலையம் சென்றிருந்தபோது, அங்கிருந்த ஒருவர் விஜய் முதல்வர் ஆனது குறித்து என்னிடம் கேள்வி எழுப்பினார். அவர் பார்ப்பதற்குப் பத்திரிகையாளர் போலவே தெரியவில்லை; கையில் ஒரு மொபைல் போனை வைத்துக்கொண்டு வீடியோ எடுத்தபடி கேள்வி கேட்டார். அதனால் நான் அவருக்குப் பதில் சொல்லாமல் கடந்து சென்றேன். அதைக் காரணியமாக வைத்து, நான் விஜய்க்கு வாழ்த்து சொல்லவில்லை என்று தேவையில்லாமல் விமர்சனம் செய்தார்கள்.”
“அடுத்ததாக, விஜய் முதல்வரானதில் எனக்குப் பொறாமை என்றெல்லாம் சிலர் பேசுகிறார்கள். நான் தற்போதே அரசியலிலேயே இல்லை, அப்படியிருக்கும்போது விஜய் முதல்வர் ஆவதைப் பார்த்து நான் ஏன் பொறாமைப்பட வேண்டும்? ஒருவேளை என் சமகாலத்து நண்பரான கமல் ஹாசன் முதல்வராகி இருந்தால் கூட எனக்குப் பொறாமை வந்திருக்குமோ என்னவோ தெரியாது!
எனக்கும் விஜய்க்கும் இடையே கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் தலைமுறை இடைவெளி (Age gap) உள்ளது. அவர் முதல்வராவதில் எனக்குப் பொறாமை வர எந்தக் காரணமும் இல்லை. இந்த வயதில், சினிமா புகழைக் கொண்டு, தமிழகத்தின் இரு பெரும் பாரம்பரியமிக்க அரசியல் கட்சிகளை எதிர்த்து, தனி ஆளாக நின்று ஒருவர் வெற்றி பெற்றிருப்பது எனக்குப் பொறாமையைத் தரவில்லை; மாறாக ஆச்சரியம் கலந்த மிகுந்த சந்தோஷத்தையே கொடுத்துள்ளது.”
“தற்போது விஜய் மீது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதனை அவர் கண்டிப்பாகப் பூர்த்தி செய்வார் என்று நம்புகிறேன். மக்களை நேரில் சந்தித்து அவர் நல்ல திட்டங்களைச் செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆனால், புதியதாகப் பொறுப்பேற்றுள்ள அவரை அடுத்த 2 ஆண்டுகளுக்கு யாரும் எந்தத் தொந்தரவும் செய்யக் கூடாது. அவர் செயல்படுவதற்குத் தகுந்த அவகாசம் கொடுக்க வேண்டும்.
அதே நேரத்தில், இனிமேல் விஜய் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவருடைய தொண்டர்களோ அல்லது ரசிகர்களோ யார் என்ன தவறு செய்தாலும், அது நேரடியாக விஜய் என்ற தனிமனிதரையும் அவருடைய தலைமையையுமே போய்ப் பாதிக்கும்.”
அரசியலுக்கு வராதது ஏன்? “நான் ஏன் அரசியலுக்கு வரவில்லை என்பது குறித்து ஏற்கனவே சுமார் 3 பக்கத்திற்கு விரிவான விளக்கம் கொடுத்து அறிக்கையாக வெளியிட்டுள்ளேன். ஒருவேளை நான் மட்டும் அரசியலுக்கு வந்திருந்தால், கண்டிப்பாக 100 சதவீதம் வெற்றி பெற்றிருப்பேன்” என்று ரஜினிகாந்த் அந்தச் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
