Connect with us
 

Reviews

வா வாத்தியார் – திரைவிமர்சனம் !

Published

on

Cast: கார்த்தி, கிருத்தி ஷெட்டி, ராஜ்கிரண், சத்யராஜ், ஆனந்தராஜ், ஷில்பா மஞ்சுநாத், நிழல்கள் ரவி 
Production:
Director: நலன் குமாரசாமி
Screenplay: நலன் குமாரசாமி
Cinematography: ஜார்ஜ் C. வில்லியம்ஸ் ISC
Editing:வெற்றி கிருஷ்ணன்
Music: சந்தோஷ் நாராயணன்
Language: Tamil
Runtime: 2 Hours 9 Mins
Release Date: January 14, 2025

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான வா வாத்தியார் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. எம்ஜிஆர் மீது அளவில்லாத பற்று கொண்ட ஒரு கிராமத்து முதியவர் – மாசிலா ஊரைச் சேர்ந்த ராஜ்கிரண் – தனது பேரனை எம்ஜிஆர் பாதையில் நடக்க வேண்டும் என்ற கனவோடு வளர்க்கிறார். அந்த பேரனாக கார்த்தி. “வாத்தியார் காட்டிய வழி வாழ்க்கைக்கு போதுமா?” என்ற ஒற்றை கேள்வியை மையமாக வைத்து நகர்கிறது படம்.

இந்த ஒன்லைன் நிச்சயம் சுவாரசியமானது. ஆனால், அதை திரையில் உயிர்ப்பிக்க வேண்டிய திரைக்கதையும் காட்சிகளும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்பதே உண்மை.

சூது கவ்வும், காதலும் கடந்து போகும் போன்ற படங்களால் தனித்த அடையாளம் பெற்ற நலன் குமாரசாமியிடமிருந்து ஒரு கூர்மையான, நையாண்டி கலந்த அரசியல்–சமூக பார்வையை எதிர்பார்த்தவர்களுக்கு வா வாத்தியார் ஏமாற்றத்தையே தருகிறது. ஆரம்ப காட்சிகள் சற்றே நம்பிக்கை அளித்தாலும், அதன் பின்பு வரும் காட்சிகள் திரைக்கதையின் பலவீனத்தை ஒவ்வொன்றாக வெளிப்படுத்துகின்றன.

உருவாக்கத்தில் சில நல்ல யோசனைகள் இருந்தாலும், அவை முழுமையாக பயன்படுத்தப்படவில்லை. கதையின் மையமாக இருக்க வேண்டிய கார்த்தி கதாபாத்திரம், தெளிவான நோக்கமோ அழுத்தமோ இல்லாமல் நகர்கிறது. ராஜ்கிரண் வசனங்களில் இருக்கும் வலிமை, அவரின் பாத்திரத்தை உயர்த்துவதற்குப் பதிலாக, கார்த்தியின் பாத்திரத்தை மேலும் சோர்வாக காட்டும் விதமாக அமைந்திருக்கிறது.

முதல்பாதி முடிவில் வரும் திருப்பம், காகிதத்தில் சுவாரசியமாகத் தோன்றினாலும், திரையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. எம்ஜிஆரை மையமாக வைத்து நாயகனின் செயல்பாடுகள் எழுதப்பட்டிருந்தாலும், அந்த சித்தாந்தத்தின் ஆழம் முழுமையாக வெளிப்படவில்லை. இதனால், இளம் தலைமுறை பார்வையாளர்களுக்கு கதையுடன் இணைப்பு ஏற்படாத நிலை உருவாகிறது.

பொதுவாக கதைத்தேர்வில் கவனம் செலுத்தும் கார்த்தி, இந்தப் படத்தில் தன் தனித்துவத்தை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை பெறவில்லை. எம்ஜிஆர் போல் நடிப்பதற்கான முயற்சி இருந்தாலும், அந்த நடிப்புக்கும் கதைக்கும் இடையில் உறுதியான பாலம் இல்லை.

க்ருத்தி ஷெட்டிக்கு நடிக்க அதிக வாய்ப்பு இல்லை. கதாபாத்திரம் எழுதப்பட்ட விதம், அவரை ஒரு அலங்கார அம்சமாக மட்டுமே நிறுத்துகிறது. ராஜ்கிரண் வரும் காட்சிகள் மட்டும் படத்திற்கு ஓரளவு ஆறுதலாக இருக்கின்றன. சத்யராஜின் தோற்ற வடிவமைப்பும் கவனிக்கத்தக்கது.

கமர்சியல் சினிமாவாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில், மசாலாவை சேர்க்க முயன்றிருப்பது தெளிவாக தெரிகிறது. ஆனால், அந்த முயற்சியே கதையின் இயல்பை குலைத்துள்ளது. எம்ஜிஆரை முன்னிலைப்படுத்தும் ஒரு குறிப்பிட்ட அரசியல் செயல்பாட்டை மறைமுகமாக விமர்சிக்க முயன்றாலும், அது தெளிவாகவும் தாக்கமாகவும் அமையவில்லை.

இடைவேளைக் காட்சியின் எடிட்டிங், கண்ணாடி வழியாக கார்த்தியும் எம்ஜிஆரும் சந்திக்கும் காட்சி, “ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்” பாடல் காட்சிப்படுத்தல் போன்ற சில தருணங்கள் மட்டும் படத்தில் நினைவில் நிற்கின்றன.

எம்ஜிஆர் கூறிய புகழ்பெற்ற வசனம் ஒன்று உண்டு:
“கரிகாலன் குறி வைத்தால் தவற மாட்டான். தவறினால், குறி வைக்க மாட்டான்.”

ஆனால் வா வாத்தியார் படக்குழு, தெளிவான குறி ஒன்றை தேர்ந்தெடுக்காமல், பல திசைகளில் முயன்றிருக்கிறது. அந்த முயற்சிகள் கூர்மையற்றதாக முடிந்துவிட்டன. கையில் இருந்தது கத்தி அல்ல – வெறும் பிளாஸ்டிக் கத்தி என்ற உணர்வே மிஞ்சுகிறது.

Rating [3/5]