Connect with us
 

News

விஸ்வநாத் & சன்ஸ் படத்திலிருந்து சூர்யா குரலில் The Wedding Song வெளியானது !

Published

on

“பட்டாம்பூச்சி / நேனோ பட்டர்ஃப்ளை” என்ற முதல் சிங்கிள் மூலம் இசை ரசிகர்களின் மனதை வென்ற “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படக் குழு, தற்போது மற்றொரு உற்சாகமான இசை விருந்தாக “தி வெட்டிங் சாங்” பாடலை வெளியிட்டுள்ளது. வெளியான சில நிமிடங்களிலேயே ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று, இந்த சீசனின் கொண்டாட்டப் பாடலாக இது பேசப்பட்டு வருகிறது.

முழுக்க முழுக்க திருமணக் கொண்டாட்டத்தின் மகிழ்ச்சி, உற்சாகம் மற்றும் குடும்ப பாசத்தை வெளிப்படுத்தும் இந்த பாடலில், சூர்யா மற்றும் மமிதா பைஜு தங்களது உற்சாகமான நடன அசைவுகளால் திரையை வண்ணமயமாக்கியுள்ளனர். குடும்பத்தின் பிரம்மாண்டமான  திருமணத்தின் கொண்டாட்ட மனநிலையை அப்படியே ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் இந்த பாடல் உருவாகியுள்ளது.

இந்தப் பாடலின் சிறப்பு அம்சமாக, நடிகர் சூர்யா தானே தனது குரலில் பாடியிருப்பது ரசிகர்களுக்கு இனிய ஆச்சரியமாக அமைந்துள்ளது. அவரது குரலும், திரையில் வெளிப்படும் உற்சாகமான நடிப்பும் இணைந்து பாடலுக்கு கூடுதல் உயிர் கொடுத்துள்ளன.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், மீண்டும் ஒருமுறை தனது துள்ளலான மற்றும் கொண்டாட்ட மனநிலையை பிரதிபலிக்கும் இசையால் அனைவரையும் கவர்ந்துள்ளார். பாடலாசிரியர் கென் கருணாஸ் எழுதிய வரிகள், திருமண விழாவின் மகிழ்ச்சியையும் குடும்ப உறவுகளின் உணர்வுகளையும் அழகாக வெளிப்படுத்துகின்றன.

ஏற்கனவே “பட்டாம்பூச்சி / நேனோ பட்டர்ஃப்ளை” மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள “தி வெட்டிங் சாங்” பாடலும் அதே வரிசையில் ரசிகர்களின் பிளேலிஸ்டில் இடம்பிடித்துள்ளது. தொடர்ச்சியாக இரண்டு வெற்றிப் பாடல்கள் வெளியாகியுள்ளதால், “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படத்தை சூர்யதேவரா நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர்சிதாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் (Sithara Entertainments) மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர்  ( Fortune Four Cinemas )   சினிமாஸ் நிறுவனங்களின் சார்பில் தயாரித்துள்ளனர். ஸ்ரீகரா ஸ்டூடியோஸ் நிறுவனம் படத்தை வழங்குகிறது.

இந்தியா முழுவதும் சுதந்திர தின வார இறுதி கொண்டாட்டத்தை முன்னிட்டு, 2026 ஆகஸ்ட் 14 ஆம் தேதி “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.