News
சிம்புவின் ‘அரசன்’ படப்பிடிப்பில் மீண்டும் தாமதமா?
இயக்குநர் வெற்றிமாறன் – நடிகர் சிலம்பரசன் கூட்டணியில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தாமதமாக நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் வெற்றிமாறன், முதல் முறையாக நடிகர் சிலம்பரசனுடன் இணையும் திரைப்படம் ‘அரசன்’. இப்படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியானதிலிருந்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அனிருத்தின் மாஸான பின்னணி இசையும் சேர்ந்து பட்டையக் கிளப்பியதால், இந்தத் திரைப்படம் எப்போது திரைக்கு வரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
ஆரம்பகட்ட சிக்கல்கள் :
பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்தப் படத்தை நடப்பு ஆண்டிலேயே திரைக்குக் கொண்டுவர திட்டமிட்டு, படப்பிடிப்பை விரைந்து முடிக்கப் படக்குழுவினர் ஆயத்தமாகினர். ஆனால், நடிகர் சிலம்பரசன் மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஆகியோருக்கிடையே எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட சில பிரச்சினைகள் காரணமாக ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு இடையில் நிறுத்தப்பட்டது.
மீண்டும் துவங்கிய படப்பிடிப்பு… ஆனால்?
பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு பிரச்சினைகள் சுமுகமாக முடிந்து, தற்போது படப்பிடிப்பு மீண்டும் துவங்கி நடைபெற்று வருகிறது. இருப்பினும், படப்பிடிப்பு முந்தைய வேகத்தில் தொடர்ச்சியாக நடைபெறவில்லை என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முக்கியக் காரணம், இயக்குநர் வெற்றிமாறன் ‘அரசன்’ படத்தை மட்டும் தற்போது இயக்கவில்லை. நடிகர் கென் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘ராஜன் வகையறா’ என்ற மற்றொரு படத்தின் படப்பிடிப்பையும் வெற்றிமாறன் ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார்.
வெளியீட்டுத் தேதியில் சிக்கல்?
ஒரே நேரத்தில் இரண்டு பட வேலைகளையும் இயக்குநர் கவனித்து வருவதால், ‘அரசன்’ படப்பிடிப்பு தொடர்ச்சியாக இல்லாமல் ஓரிரு நாட்கள் இடைவெளி விட்டு எடுக்கப்பட்டு வருகிறதாம். இந்த தாமதத்தின் காரணமாக, ஏற்கனவே திட்டமிட்ட தேதிக்குள் ‘அரசன்’ படப்பிடிப்பை முழுமையாக நிறைவு செய்வதில் காலதாமதம் ஏற்படலாம் என்றும், இதனால் படத்தின் வெளியீட்டுத் தள்ளிப்போக வாய்ப்புள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிம்புவின் மாஸான நடிப்பில், வெற்றிமாறனின் அழுத்தமான கதையில் உருவாகும் இந்த ‘அரசன்’ குறித்த அதிகாரப்பூர்வ அடுத்தகட்ட அப்டேட்டுகளுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
