News
மீண்டும் வருகிறது ‘ரேனிகுண்டா 2’ வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு !
தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி, ரசிகர்களிடையேயும் விமர்சகர்களிடையேயும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘ரேனிகுண்டா’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. ‘ரேனிகுண்டா 2’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு போஸ்டர் இன்று (ஜூன் 5) வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குநர் பன்னீர்செல்வம் இயக்கத்தில், அரசு கூர்நோக்கு இல்லத்தில் (சிறார் சீர்திருத்தப் பள்ளி) இருந்து தப்பிக்கும் 5 சிறுவர்களின் வாழ்க்கையையும், அவர்களின் எதார்த்தமான குற்றப் பின்னணியையும் மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் “ரேனிகுண்டா”. புதுமையான திரைக்கதை, எதார்த்தமான வசனங்கள் மற்றும் விறுவிறுப்பான இயக்கத்தால் இப்படம் அன்றைய காலகட்டத்தில் சூப்பர் ஹிட் அடித்தது.
இதனைத் தொடர்ந்து, இயக்குநர் பன்னீர்செல்வம் கடந்த 2017 ஆம் ஆண்டு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் ‘கருப்பன்’ திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இயக்குநர் பன்னீர்செல்வம் மீண்டும் தனது ஹிட் படமான ‘ரேனிகுண்டா’வின் இரண்டாம் பாகத்தைக் கையில் எடுத்துள்ளார். இந்தப் படத்தை அவரே இயக்கி, தயாரிக்கவும் உள்ளார்.
இன்று இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், ரசிகர்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சியாக, இப்படத்தின் அதிகாரப்பூர்வ ‘முதல் பார்வை’ (First Look) போஸ்டர் நாளை (ஜூன் 6) வெளியாகும் என்றும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இத்திரைப்படத்திற்கு மனு ரவிச்சந்திரன் இசையமைக்கிறார். தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியர்களான யுகபாரதி மற்றும் விவேகா ஆகியோர் இப்படத்தின் பாடல்களை எழுதுகின்றனர். இதனால் படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
முதல் பாகத்தைப் போலவே இந்த இரண்டாம் பாகமும் விறுவிறுப்பான ஆக்ஷன் மற்றும் எதார்த்தமான கதைக்களத்துடன் இருக்குமா என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். படத்தின் நடிகர், நடிகையர் மற்றும் இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
