News
கருப்பன் வருவான் கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி !
திரையுலகில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகவிருந்த ‘கருப்பு’ திரைப்படம் தள்ளிப்போனதால், அதன் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகர் சூர்யா நடிப்பில், ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படம் இன்று (மே 14, 2026) வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு இடையே ஏற்பட்ட நிதிப் பிரச்னை காரணமாக திட்டமிட்டபடி படம் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
படம் வெளியாவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்து இயக்குனர் ஆர்ஜே பாலாஜி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மிகுந்த மனவேதனையுடன் அவர் பேசியதாவது:
“அனைத்து ரசிகர்களிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இது போன்ற ஒரு சூழல் நடந்திருக்கக் கூடாது. பொதுவாக நாம் நம்முடைய கவலைகளையும் துன்பங்களையும் மறக்கத்தான் திரைப்படம் பார்க்க வருகிறோம். ஆனால், அந்தப் படத்தைப் பார்க்க வருவதே துன்பமாக அமைந்துவிடக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
நானும் இதை எதிர்பார்க்கவில்லை. ‘கருப்பன் வரான் வழி மறிக்காதே’ என நாங்கள் பாடினோம், ஆனால் நிஜத்தில் நிறைய பேர் வழியை மறித்துக்கொண்டிருக்கிறார்கள். எனினும் கடவுள் நம் பக்கம் இருக்கிறார். இந்தப் பிரச்னைகள் முடிந்து படம் இன்று மாலை வெளியாகும் என நம்புகிறேன். படம் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.”
என்று அவர் கண்கலங்கியபடி பேசியுள்ளார். ஆர்ஜே பாலாஜியின் இந்த உருக்கமான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, இந்தப் பிரச்னையைத் தீர்க்க நடிகர் சூர்யா முன்வந்துள்ளதாகவும், சுமார் 100 கோடி ரூபாய் வரையிலான நிலுவைத் தொகையைச் செலுத்தி படத்தின் வெளியீட்டை உறுதி செய்ய அவர் முயற்சி எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
‘படையப்பா’, ‘கில்லி’ போன்ற மாஸ் கமர்சியல் படமாக இது இருக்கும் என ஏற்கனவே ஆர்ஜே பாலாஜி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மாலைக்குள் சிக்கல்கள் தீர்ந்து படம் திரைக்கு வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
