News
ஜன நாயகன் கசிவு மனமுடைந்த நடிகை பூஜா ஹெக்டே உருக்கம் !
நடிகர் விஜய் மற்றும் எச். வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் இணையத்தில் கசிந்துள்ள சம்பவம் படக்குழுவினரையும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து அந்தப் படத்தின் நாயகி பூஜா ஹெக்டே தனது வேதனையை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
தணிக்கை சிக்கலில் ‘ஜன நாயகன்’
இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக உருவெடுத்துள்ள ‘ஜன நாயகன்’, தணிக்கைச் சான்றிதழ் பெறுவதில் உள்ள சில நடைமுறை சிக்கல்களால் திரையரங்குகளில் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ எனப் பல நட்சத்திரங்கள் இதில் இணைந்து நடித்துள்ளனர்.
பூஜா ஹெக்டேவின் உருக்கமான பதிவு
படம் இணையத்தில் கசிந்ததை அறிந்த பூஜா ஹெக்டே, தனது எக்ஸ் (X) பக்கத்தில் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
“என் அருமையான ரசிகர்களே, ஒரு படம் என்பது கணக்கில்லாத மணிநேர உழைப்பு, ஆக்கப்பூர்வமான முயற்சிகள் மற்றும் பலரது தனிப்பட்ட தியாகங்களால் உருவாவது. உங்களுக்கு ஒரு நல்ல அனுபவத்தைக் கொடுக்க வேண்டும் என்ற கூட்டு முயற்சியே ஒரு திரைப்படம்.”
“மனம் உடைந்துவிட்டோம்”
தொடர்ந்து பேசிய அவர், “படம் கசிந்த செய்தி கேட்டு நாங்கள் அனைவரும் மனம் உடைந்துவிட்டோம். இது எனக்கு மட்டுமல்ல, இதில் பணியாற்றிய ஒவ்வொரு கலைஞருக்கும் நேர்ந்த வலி. சட்டத்துக்குப் புறம்பாகப் படம் பகிரப்படுவதைப் பார்ப்பது கஷ்டமாக இருக்கிறது. இது வெறும் எண்ணிக்கை பற்றியது அல்ல, உழைத்த கலைஞர்களின் மரியாதையைச் சிதைக்கும் செயல்,” எனத் தெரிவித்துள்ளார்.
கடைசிப் படத்தைக் கொண்டாட வேண்டாமா?
நடிகர் விஜய்யின் சினிமா பயணத்தில் இதுவே கடைசிப் படம் என்பதைக் குறிப்பிட்ட பூஜா, “நமது விஜய் சாரினுடைய கடைசிப் படத்தை நாம் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டாட வேண்டாமா? முறையாகத் திரையரங்கில் பார்த்து அவருக்குச் சிறந்த விடைபெறுதலை வழங்க வேண்டும். எனவே, காத்திருந்து திரையரங்குகளில் மட்டும் படத்தைப் பாருங்கள்,” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இறுதியாக, திருட்டுத்தனமாகப் படம் பார்ப்பதை ஊக்குவிக்க வேண்டாம் என்றும், கலை மற்றும் கலைஞர்களின் உழைப்பை மதிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
