Connect with us
 

News

”நடிகர் தனுஷ் எனக்கு இன்ஸ்பிரேஷன்”: நடிகை வர்ஷினி !

Published

on

‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் ரம்யா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வர்ஷினி கார்மேகம், கோயம்புத்தூரில் உள்ள பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் கல்லூரியில் இயற்பியல் படித்தவர். குறும்படங்கள் மற்றும் மேடை அனுபவங்கள் மூலம் நடிப்புத்துறையில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது.

அவரது கலைப் பயணத்தில் பரதநாட்டியத்திற்கும் முக்கிய பங்கு உண்டு. உணர்வுகளை வெளிப்படுத்துவது, ஒழுக்கம் மற்றும் உடல் மொழி ஆகியவற்றில் அவருக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது பரதநாட்டியம். தொடர்ந்து குறும்படங்களில் நடித்து வந்த அவர், கேமரா முன் தனது தன்னம்பிக்கையையும் படிப்படியாக வளர்த்துக் கொண்டார்.

வர்ஷினிக்கு இந்தி சினிமா மீது தனி ஈர்ப்பு உண்டு. கேமராவுக்காக வெறுமனே நடிப்பதைத் தாண்டி, கதாபாத்திரங்களை தங்கள் திறமையான நடிப்பு மூலம் உயிர்ப்பிக்கும் தபு, ரேகா, ஐஸ்வர்யா ராய் மற்றும் ஷோபனா போன்ற நடிகைகள் தனக்கு முன்மாதிரியானவர்கள் என்கிறார். இந்தி மொழியை நன்றாகப் படிக்கவும், சரியாக உச்சரிக்கவும் முடியும் என்று கூறும் அவர், இது ஒரு கலைஞராக தனக்கு இன்னும் அதிக வாய்ப்புகளைத் திறக்கும் என நம்புகிறார்.

“இந்தி தெரிந்திருப்பது ஒரு கலைஞருக்கு இன்னும் பல்வேறு வாய்ப்புகளை கொடுக்கும்.குறிப்பாக, ஓடிடி தளங்கள் வளர்ந்து வரும் இந்த காலத்தில் ஒரே மொழிக்குள்ளேயே சுருங்கி விடாமல், பல்வேறு கதாபாத்திரங்களையும் வாய்ப்புகளையும் தேடிச் செல்ல இது உதவுகிறது” என்கிறார் வர்ஷினி.

தற்கால நடிகர்களில் சாய் பல்லவியின் இயல்பான நடிப்பும், நடிகர் தனுஷின் பன்முகத்தன்மை மற்றும் கதாபாத்திரத்திற்காக தன்னை முழுமையாக மாற்றிக்கொள்ளும் திறனும் தனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் என்கிறார் வர்ஷினி. அதேபோல, யுவன் சங்கர் ராஜா மற்றும் இளையராஜா ஆகிய இருவரின் இசைக்கும் அவர் ரசிகை.

தனது திரைத்துறை பயணத்தில் ‘மொத ராத்திரி’ திரைப்படம் முக்கியமான மைல்கல் என்கிறார் வர்ஷினி. குறும்படங்களைக் கடந்து, தனது நடிப்பு திறமை, நடன அனுபவம் மற்றும் நடிப்பின் மீதான காதலை பலதரப்பட்ட பார்வையாளர்களிடம் கொண்டு செல்லும் வாய்ப்பாக இப்படத்தை அவர் பார்க்கிறார். கோயம்புத்தூரில் இயற்பியல் படித்ததிலிருந்து, திரையுலகில் காலடி எடுத்து வைக்கும் வர்ஷினியின் பயணம், எதிர்பாராத பாதைகள்கூட சில நேரங்களில் மிகவும் உற்சாகமான இலக்குகளை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் என்பதை நிரூபிக்கிறது.

Continue Reading